விவரணை | இயா யான்பெரி (The Details | Ia Genberg)
2024 சர்வதேச புக்கர் பரிசு குறும்பட்டியல்
(International Booker Prize 2024 Shortlist)
Vivaranai
தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி
சித்திரத்தின் மெய்யான கதாபாத்திரம் யார்? ஓவியமாகத் தீட்டப்படுகிறவரா? அல்லது தூரிகையைப் பிடித்திருப்பவரா? ஒரு வாழ்க்கையை உருவாக்கிய துண்டு துண்டான நினைவுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் விதமாக, நான்கு சித்திரங்களைச் சுற்றிப் புனையப்பட்ட நாவல்தான் ‘விவரணை’. ஒரு மனுஷியாக இருப்பதற்கு என்ன அர்த்தம் என்பதை அன்னியோன்யமான கொண்டாட்டத்துடன் கிளர்ச்சியும் ஆர்வத்தூண்டலும் மிக்க வார்த்தைகளால் எழுதிச் செல்கிறார் இயா யான்பெரி.
காய்ச்சலின் பெருந்தகிப்பில் நோயுற்றுப் படுத்த படுக்கையாக கிடக்கிறாள் ஒருத்தி. திடீரென்று, தன் கடந்த காலத்தில் முக்கியமாக இருந்த ஒரு நாவலை மீண்டும் வாசிக்க வேண்டும் என்ற வேட்கை எழுகிறது. அந்தப் புத்தகத்தின் உள்ளே ஒரு குறிப்பு எழுதப்பட்டுள்ளது: அந்நாளைய தோழியின் செய்தி.
அவளால் மறந்துவிட முடியாத மனிதர்களும், மறக்கவியலாத விஷயங்களும் கொண்ட கடந்த காலத்தின் பக்கங்கள் விரிகின்றன. இப்போது பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராகிவிட்ட யோஹன்னா என்ற அந்தத் தோழி, சென்று போன ஆண்டுகளில் கண் காணாமல் போய்விட்ட நிக்கி, மிகச் சரியான நேரத்தில் புயலெனத் தோன்றுகின்ற அலெஹண்ட்ரோ, இவர்களோடு பிடி கொடுக்காமல் நழுவிப் போகும் இயல்பினால் வலி மிகுந்த ரகசியத்தை மறைத்திருந்த பிரிகிடா.